கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல கட்ட ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. பொது போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளன. மத்திய உள்துறை அமைச்சகம் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய மாநில அரசுகளை அறிவுறுத்திய நிலையில், வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். இந்நிலையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பொது போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து இன்று அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்களாவது,
- கடந்த ஐந்து மாதங்களில் அரசு வெறும் ஆயிரம் ரூபாய் மட்டுமே உதவித்தொகையாக அளித்தது.
- நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருட்கள் வழங்கியது. ஆனால், அவை போதுமானதாக இல்லை.
- டாஸ்மாக் கடைகளைத் திறந்ததினால் ஏழை எளிய அடித்தட்டுப் பொதுமக்கள் குடும்பங்களின் அமைதி பறிபோய் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் பெருகி வருகின்றன.
- மாவட்டங்களுக்கு இடையில் போக்குவரத்தை நிறுத்தி, இ-பாஸ் வாங்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது.
- கடந்த ஐந்து மாதங்களில் இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்த 47 லட்சம் பேருக்கு வழங்கவில்லை. இதனால் பொதுமக்கள் அடைந்த துன்பத்திற்கு அளவே இல்லை.
- குழந்தைகளுக்கு இணைய வழிக் கல்வியை அறிமுகப்படுத்தியது. ஆனால் அவர்களுக்கு அந்தப் பாடத்தை படிப்பதற்கான கணினி மற்றும் திறன் அலைபேசி வசதிகள் இல்லை.
- பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் அரசு திறன் அலைபேசிகளை வழங்கியதைப் போன்று தமிழக அரசும் வழங்கி இருக்க வேண்டும்.
- தமிழக அரசிடம் அதற்கான நிதி இல்லை கடந்த ஐந்து மாதங்களில் தமிழக அரசின் நிதி நிலை சீரழிந்து விட்டது அரசு திவால் ஆகும் நிலையில் இருக்கின்றது.
- கர்நாடக அரசு அனைத்துத் தடைகளையும் விலக்கிக் கொண்டு விட்டது.
- மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி புதுச்சேரி மாநில அரசு தனது எல்லைகளைத் திறந்து விட்டது.
- மிகக் கடுமையாக பாதிக்கப்பட்ட தில்லியில், ஒரு மாதத்திற்கு முன்பே அனைத்துத் தடைகளும் விலக்கப்பட்டு அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பி விட்டது.
எனவே, அனைத்துத் தரப்பு மக்களின் நலன் கருதி, தமிழக அரசு, தமிழ்நாட்டுக்கு உள்ளே போக்குவரத்து முடக்கத்தை நீக்க வேண்டும், செப்டம்பர் 1 முதல் ரயில்கள் ஓடுவதற்கும் ஆவன செய்ய வேண்டும், வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் வருவதற்கும் வகை செய்ய வேண்டும் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.” என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.