முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 தமிழகர்களை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு கோரிக்கைகள் எழுந்து வருகிறது. இந்நிலையில் 7 தமிழர்கள் விடுதலை குறித்து தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும் குடியரசுத் தலைவருக்கு கோரிக்கை விடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமர் திரு ராஜீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை 9.9.2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி மாண்புமிகு தமிழ்நாடு தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்கு அனுப்பியுள்ளதையும்-
“அந்த அமைச்சரவை தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவர் அவர்களுக்குத்தான் இருக்கிறது எனக் கூறி, தமிழக ஆளுநர் அவர்கள் குடியரசுத் தலைவர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை அனுப்பி வைத்திருப்பதையும்” சுட்டிக்காட்டி 19.5.2021 அன்று மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்,
“மேற்கண்ட ஏழு பேரும் 30 வருடத்திற்கும் மேலாக சிறையில் வாடுகிறார்கள். உச்சநீதிமன்றமே கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலை செய்ய அறிவுறுத்தியுள்ளது எனத் தெரிவித்து – ஏழு பேரையும் விடுதலை செய்ய 9.9.2018 அன்று தமிழ்நாடு அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும் “ என்று வலியுறுத்தியுள்ளார்.
மாண்புமிகு குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எழுதிய கடிதத்தை திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற குழுத் தலைவர் திரு டி.ஆர். பாலு அவர்கள் மாண்புமிகு குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் இன்று நேரில் அளித்துள்ளார்.