சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐந்து மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் அனைத்து செயல்பாடுகளும் முடங்கிப்போய் உள்ளது.
இந்நிலையில் பிரிட்டனில் கொரோனா தொற்று சற்று குறைந்த நிலையில், அங்கு படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க, பொதுமக்கள் வெளியே வரும்போது முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கியுள்ளது பிரிட்டன் அரசு. முகக்கவசம் அணியாமல் இருக்கும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. பொது போக்குவரத்து, வங்கிகள், சூப்பர் மார்க்கெட், தபால் நிலையங்கள், ஆகியவற்றுக்கு பிரிட்டன் மக்கள் வரும்போது கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும்.
இதனை பின்பற்றாதவர்களுக்கு 100 பவுன்டு அபராதமும் விதிக்கப்படும் என்றும், மூன்று வயதுக்குக் குறைவாக உள்ள குழந்தைகள் முகக்கவசம் அணியத் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த வருடத்தின் மத்தியில் பிரிட்டனில் கொரோனா பரவல் நீங்கும் என்றும், எனினும் இரண்டாம் கட்டப் பரவல் குறித்த அச்சம் இருப்பதாகவும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.