தமிழகத்தில் இந்த ஆண்டு விநாயகர் சதூர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலத்திற்கு அனுமதியில்லை என்று தடை விதித்து தமிழக அரசு அறிவித்திருந்தது. கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக பொது மக்கள் நலன் கருதி பொது வெளியில மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க இந்த தடையை விதித்துள்ளது மாநில அரசு. இந்நிலையில் இந்த தடைக்கு பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தடையை மீறி தமிழகம் முழுவதும் 1,50,000 இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட உள்ளதாக, இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்தார்.
இதற்கிடையில் பத்திரிகையாளர் அன்பழகன் என்பவர் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் விநாயகர் சிலை ஊர்வலம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது போல் தமிழகத்திலும் விநாயகர் சதுர்த்தியன்று விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். மேலும் இந்து முன்னணியினர் விடுத்த அறிவிப்பை சுட்டிக் காட்டிய மனுதாரர் அவற்றை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் தடையை மீறி ஊர்வலம் சென்றால் இந்து முன்னணியின் மூத்த தலைவர் ராமகோபாலன் மற்றும் காடேஸ்வரா சுப்பிரமணியம் உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரிக்கப்பட்டது. அதில் அவர்கள் கூறியதாவது, ஏற்கனவே தமிழக அரசு விநாயகர் சதூர்த்தி பண்டிகையை முன்னிட்டு பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைப்பதற்கும், ஊர்வலத்திற்கு அனுமதியில்லை என்று தடை விதித்துள்ளது, இந்த தடையை மீறுவோர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நீதிமன்றம் நம்புவதாக தெரிவித்தனர். மேலும், அரசின் தடை உத்தரவை மீறுவோம் என இந்து முன்னணியின் மிரட்டல் குறித்து மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. அப்போது நீதிபதிகள் குறுக்கிட்டு, இதுபோன்ற மிரட்டல்களிலிருந்து அரசை பாதுகாப்பது நீதிமன்றத்தின் வேலை இல்லை, அரசு உத்தரவுகளை மீறுபவர்களை தமிழக அரசு பார்த்துக் கொள்ளும் என தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.