சுற்றுச்சூழல் வரைவு அறிவிக்கை 2020 மீதான கருத்து கேட்பு நாளையுடன் (ஆகஸ்ட்11) முடிவடைகிறது. மாநில மொழிகளில் இதனை வெளியிட வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் அறிவுரை பின்பற்றப்பட்டதாக தெரியவில்லை. ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்பட்டது. நாடு முழுவதும் சமூக ஆர்வலர்கள், சூழலியலாளர்கள், அறிஞர்கள், பல மாநில கட்சிகள், பொதுமக்கள் என பலரும் இந்த வரைவு அறிவிக்கையை எதிர்த்தனர். சமூக வலைதளங்களிலும் இதற்கான எதிர்ப்பு ட்ரெண்டிங் ஆனது.
வழக்கம் போல இந்த விஷயத்திலும் தமிழகம் மத்திய அரசுக்கு தனது கடுமையான எதிர்ப்பை தெரிவித்தது. சமூக ஆர்வலர் பத்மபிரியா பற்ற வைத்த நெருப்பு சாமானியர்கள், சமூக ஆர்வலர்கள், நடிகர்கள், அறிஞர்கள், அரசியல்வாதிகள் என அனைவரையும் பற்றிக் கொண்டது. நடிகர்கள் கார்த்திக் சூர்யா இருவரும் இந்த சுற்றுச்சூழல் அறிவிக்கை 2020 ஐ கடுமையாக எதிர்த்தது மிகப்பெரும் பேசுபொருளாக அமைந்தது.
இதைத் தொடர்ந்து தேசிய அளவிலும் எதிர்ப்பு கிளம்பியது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,
- இந்த சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிவிக்கை ஒரு பேரழிவு.
- சுற்றுச்சூழல் சீரழிவால் நேரடியாக பாதிக்கப்படும் சமூகங்களின் குரலை இது ஒடுக்குகிறது.
- நாட்டின் வளங்களைக் கொள்ளையடிக்கும் தனது வசதி படைத்த நண்பர்களுக்காக பாஜக அரசு செய்யும் செயலுக்கு இது ஒரு உதாரணம்.
- ஒவ்வொரு இந்தியரும் எழுச்சி பெற்று இந்த வரைவு அறிக்கையை எதிர்க்க வேண்டும்.
- நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான ஒவ்வொரு போரிலும் எப்போதும் முன்னணியில் இருக்கும் நமது இளைஞர்கள் இந்த போராட்டத்தையும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.” என பதிவு செய்திருந்தார்.
சுற்றுச்சூழல் வரைவு அறிவிக்கை 2020க்கு நாடு முழுவதும் எழுந்த கண்டனங்கள், விமர்சனங்கள், எதிர்ப்புகளால் தற்பொழுது மத்திய அரசு சற்றே பின் வாங்கியுள்ளது.
இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் “EIA 2020 வரைவு அறிக்கை மட்டுமே, இது இறுதியானது அல்ல. இது தொடர்பாக மக்கள் கருத்துகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இது சட்டம் ஆக்கப்படும் முன்பு மக்களின் கருத்துக்கள் பரிசீலனை செய்யப்படும்”, என்று தெரிவித்துள்ளார்.