உலக பெருந்தொற்று COVID-19 கொரோனாவால் பல நாடுகள் பொருளாதார சரிவைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. மக்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். தீவிரமாக பரவிவரும் COVID-19 தொற்று நோயைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு தடுப்பு மருந்தை உருவாக்கும் பணியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக களமிறங்கி உள்ளன. பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வரும் கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனையில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்து நல்ல பலன்களையும், முன்னேற்றத்தையும் அளித்துள்ளன.
கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் முன்னிலையில் உள்ள ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ரா ஜெனிகா நிறுவனம், இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை மனிதர்களுக்குச் செலுத்திப் பரிசோதிக்கும் அடுத்த கட்டத்திற்கு தயாராகி வருகிறது.
உலக அளவில் மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா (Serum Institute of India) நிறுவனம், கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் முன்னணியில் இருந்துவரும் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
இது குறித்து சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் இந்தியா சார்பில் கூறுகையில், “ஏற்கனவே ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தயாரிக்கும் மருந்து நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். இந்நிலையில் இப்போது புதிதாக கவி (Gavi) நிறுவனத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் உள்ள 92 நாடுகளில் உள்ள மக்களுக்குக் கொரோனா தடுப்பூசி விலைக் குறைவாக கிடைக்கும் வகையில் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் நிறுவனத்துடன் சீரம் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதன்படி இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி 3 அமெரிக்க டாலர் அதாவது 225 ரூபாய்க்கு வழங்க முடியும். உலக சுகாதார அமைப்பு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்தபின், எங்கள் நிறுவனத்தின் சார்பில் உற்பத்தி தொடங்கிவிடும். இந்தியா உள்ளிட்ட நடுத்தர வருமானம் உள்ள நாடுகளுக்கு அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் தடுப்பு மருந்துகள் கிடைக்கும்” எனவும் தெரிவித்துள்ளது.