சமீப நாட்களாக தமிழகத்தில் அமைதியை குலைத்து வன்முறைகளை உருவாக்க சிலர் முயற்சித்து வருவது கவலையளிக்கிறது என்று மஜக பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்து சமுதாய மக்களின் முருகக் கடவுளையும், கந்தசஷ்டி கவசத்தையும் விமர்சித்து கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் செய்தி வெளியிட்டிருப்பதும், இஸ்லாமிய மக்கள் பெரிதும் மதிக்கும் இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களை அவமதித்து கார்ட்டூன் வெளியிட்டிருப்பதும் சமூக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே நேற்று கோவையில் தமிழர்கள் மிகவும் மதிக்கும் தந்தை பெரியாரின் சிலையை சிலர் காவிச் சாயம் பூசி அவமதித்திருப்பதும் மக்களிடையே கடும் கண்டனங்களை உருவாக்கியிருக்கிறது. ஒரு தரப்பின் நம்பிக்கைகளை, மதீப்பீடுகளை அவமதிப்பது பெரும் குற்றமாகும். இதனால் பரஸ்பர உறவுகளும், பொது அமைதியும் கெடுகிறது என்று மஜக பொதுச்செயலாளர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தியுள்ளார்.