குறைந்த கட்டணத்தில் அதிக இணைய சேவை வழங்குவது தொலைத் தொடர்பு துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், தொலைத் தொடர்புத் துறை எதிர்கொள்ளும் நிதி நெருக்கடி மற்றும் அழுத்தத்தால் நாட்டில் இரண்டு தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் மட்டுமே செயல்படும் சூழல் ஏற்படும் என பாரதி ஏர்டெலின் உரிமையாளர் சுனில் பாரதி மிட்டல் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது, “இந்தத் துறையில் ஏற்படும் நிதி அழுத்தத்தால் இரண்டு நிறுவனங்கள் மட்டுமே செயல்பட முடியும் என்ற சூழல் ஏற்பட்டு வருகிறது.
மூன்றாவதாக வரும் நிறுவனம் பெரிய அளவிலான முதலீட்டை கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் இத்துறையில் நிலைத்தன்மையுடன் செயலாற்ற முடியாது. இந்த நிதி அழுத்தத்தால் ஏர்டெல் நிறுவனமும் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. புதிய மூலதனம், பல்வேறு சிக்கல்கள் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மிகவும் கவனத்துடன் நிர்வகித்து வருகிறோம்.” என்று கூறினார்.
மேலும், “தொலைத்தொடர்பு ஆபரேட்டர்கள் கடினமான சூழலில் நாட்டிற்கு சேவை வழங்கி வருகின்றோம். 5ஜி சேவை, ஆப்டிகல் ஃபைபர் கேபிள் உள்ளிட்டவைகளில் நிறுவனம் முதலீடு செய்ய வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. தற்போது ரூ.160க்கு மாதத்திற்கு 16GB டேட்டா வழங்குவது வருத்தமளிக் கூடிய ஒன்று என குறிப்பிட்டுள்ள அவர், அந்த விலைக்கு மாதத்திற்கு 1.6GB மட்டும் உபயோகிப்பதே சரி என்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் உள்ளிட்டவைகளை நீங்கள் பார்க்க விரும்பினால் அதிக கட்டணம் செலுத்தி அதற்கேற்ற இணைய சேவையை பெற வேண்டும்.
2020ம் ஆண்டு ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ARPU(Average Revenue Per User) ரூ.157 வரை உயர்த்தப்பட்டுள்ளது. இது மேலும் ரூ.200 வரை உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்த ஆறு மாதங்களில் மொபைல் சேவைக்கான கட்டணம் அதிகரிக்கும் என மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவலைக் கூறியுள்ளார்.